search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோவில் உச்சியில் மகாதீபம் மற்றும் பழனி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை காணலாம்.
    X
    மலைக்கோவில் உச்சியில் மகாதீபம் மற்றும் பழனி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை காணலாம்.

    பழனி முருகன் கோவில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

    யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    7 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று முன்தினம் சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதி முன்பு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    7-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 6.40 மணிக்கு விளாபூஜையும், 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது.

    மதியம் 2 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

    இதையடுத்து யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு மலைக்கோவில் உச்சியில் தீப ஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    சொக்கப்பனை எரிந்த பின்பு அதில் கிடைக்கும் ‘அஞ்சன மை' மூலவர் சன்னதியில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சின்னக்குமாரருக்கு ‘அஞ்சன மை' வைத்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி மதியம் 2 மணிக்கு பிறகு மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் 2 மணிக்கு முன்பு கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அதிகாலையிலேயே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் தரிசன வழிகள், வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளிப்பிரகாரம் முன்பு தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×