search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கார்த்திகை தீபத் திருவிழா: 8-ம் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா
    X
    கார்த்திகை தீபத் திருவிழா: 8-ம் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா

    கார்த்திகை தீபத் திருவிழா: 8-ம் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அருணாசலேஸ்வரர்கோவிலில் அங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உள்பட பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும்போது சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிலில் 8-ம் நாள் விழா நடைபெற்றது.

    காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் 5-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அங்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. மாலையில் பிச்சாண்டவர் உற்சவ உலா நடந்தது. இதையடுத்து இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்றப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் காடா துணிகளுக்கு கோவிலில் பூஜை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காடா துணியை ராஜகோபுரம் வழியாக கொண்டு வந்து சாமி சன்னதியை வலம் வந்து சம்மந்த விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்து கோவிலில் ஒப்படைத்தனர். மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வருகிற 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உலாவுடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×