search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி
    X
    சரஸ்வதி

    கல்வி ஞானம் அருளும் கலைமகள்

    சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
    முப்பெரும் தேவியரில் ஒருவரான சரஸ்வதிக்கு கலைமகள், பத்மாக்‌ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, செளதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன.

    கலைகள் அருளும் அன்னை சரஸ்வதி பற்றி பல்வேறு கதைகள் உள்ளன.

    கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும், சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. சோழ அரசின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் அவர்கள் இருவரையும் மன்னனிடம் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்தில் உணவு பரிமாற அமராவதி வந்தவுடன், அவரைக்கண்ட அம்பிகாபதி “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய...” என்று தன்னை மறந்து பாடுகின்றார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க சோழ மன்னனுக்கு அதீத கோபம் வருகின்றது. உடனே கம்பர் சரஸ்வதியை மனதில் தியானித்து தன் மகன் அம்பிகாபதியின் பாடலைத் தொடர்ந்து “கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்” எனப்பாடி முடிக்கின்றார். இந்த பாடலுக்கு சோழ மன்னன் விளக்கம் கேட்க, அதற்குக் கம்பர் வீதியில் வயதான மூதாட்டி ஒருத்தி வெயில் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதனால் அடி கொப்பளித்ததையும் பொருட்படுத்தாது கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு வீதி வழியாக வருகின்றார். எனக்கூற, உடனே அரசன் காவலாளியை அழைத்து வீதியில் போய் உண்மை நிலையை அறிந்து வரகூறினார். கம்பரின் வார்த்தையைக் காப்பாற்ற சரஸ்வதி தேவியே கொட்டி கிழங்கு விற்கும் வயோதிகப் பெண்ணாக உருவெடுத்து வீதியில் வர, காவலாளியால் அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள்.

    தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிகிறார் என்பதையே இக்கதை உணர்த்துகின்றது.

    தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என்று தனியாக கோவில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் ஆகும். இந்த ஊரை இரண்டாம் ராஜராஜசோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்குத் தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகின்றது.

    பிரம்ம தேவரும், சரஸ்வதி தேவியும் தம்பதியாக சத்திய லோகத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வந்த பொழுது சரஸ்வதி தேவிக்கு எல்லோருக்கும் கல்வியும், ஞானமும் வழங்குவதால் தானே உயர்ந்தவள்’ என்றும், பிரம்மதேவருக்கு படைப்புத்தொழில் செய்வதால் தானே உயர்ந்தவன்’ என்றும் எண்ணம் தோன்ற இருவரும் வாதிட்டு அது கடுமையான வாக்கு வாதமாக மாறி ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் ஒரே பெற்றோருக்குக் குழந்தைகளாகப் பிறந்தனர். இவர்கள் திருமண வயதை அடைந்த பொழுது பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்கின்ற விவரம் தெரிய வந்தது. எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி தங்களின் இக்கட்டான நிலையைக்கூறி இந்த தர்மசங்கடத்தில் இருந்து விடுபட ஆலோசனை கேட்டனர். அப்பொழுது சிவபெருமான் “சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது முறையல்ல என்றும், சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும்” என்றும் கூறி மறைந்தார். அதன்படியே சரஸ்வதி இங்கு கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டுள்ளார்.

    கலைவாணி சிறப்பு பண்புகள்:-

    பிரம்மா உலகைப் படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று சில புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

    தேவிபாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரிக்வேதத்தில் கலைவாணியானவள் பாடலில் உறைபவள், ஒலியில் உறைந்திருப்பவள், இசையில் கலந்திருப்பவள், அறிவின் உறைவிடம், நினைவின் உறைவிடம், சகல கல்விக்கும் சொந்தமானவள், மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள் என்றும் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன.

    “அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்” என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் “சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், “சகலகலாவல்லி மாலை” என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.

    சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
    Next Story
    ×