search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுப்பிரமணியர் சாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    X
    சுப்பிரமணியர் சாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சஷ்டி விழா: பக்தர்கள் சாமி தரிசனம்

    முருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷ்டி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டி விழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பாலதண்டாயுதபாணி சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சஷ்டியையொட்டி நடந்த பூஜையில், சாமிக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சாமிக்கு சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சை மலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணியர் ஆகிய கோவில்களில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×