search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மங்களப்பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட காட்சி.
    X
    ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மங்களப்பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர விழாவில் நாளை தங்கரதப்புறப்பாடு நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக்கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.

    எனினும் பல்வேறு காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. எனினும் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் தற்போது நின்று போன அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

    தற்போது நாடெங்கும் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் தமிழகத்திலும் பெரிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் மற்றும் கோவில் வளாகத்துக்குள் நடைபெறும் உற்சவங்கள் மட்டும் வழக்கம்போல் நடந்துவருகின்றன.

    அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 16-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கோவில் வளாகத்திற்குள்ளேயே வாகன புறப்பாடுகள் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பெரிய தேரோட்டத்துக்கு தடை உள்ளது. அதற்கு பதிலாக, உபயதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கோவில் வளாகத்திற்குள் வலம் வரும்வகையில் வடிவமைக்கப்பட்டு அவ்வப்போது வலம் வரும் தங்க ரத புறப்பாடு நடைபெறவுள்ளது. இதில் ஆண்டாள் ரங்கமன்னார் வலம் வரவுள்ளனர்.

    ஆடிப்பூரத் தேரோட்டத்திற்கென ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாள், ரங்கமன்னார் மற்றும் கருடனுக்கு பட்டு வஸ்திரங்கள் மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்டமங்களபொருட்கள் வழங்கப்படுவது வழக்கம் என்பதால், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மங்களப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவை முறைப்படி இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, இந்த வஸ்திரங்கள் அணிந்து நாளை பெருமாள்-தாயார் தங்கத்தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும்.
    Next Story
    ×