search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித நீர் தங்க குடத்தில் யானை மீது வைத்து தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்ட காட்சி.
    X
    புனித நீர் தங்க குடத்தில் யானை மீது வைத்து தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்ட காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், வழக்கமாக வீதியில் நடைபெறும் ஊர்வலம் நடைபெறவில்லை.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 3-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    வழக்கமாக காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடம், வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், வழக்கமாக வீதியில் நடைபெறும் ஊர்வலம் நடைபெறவில்லை. இதனால், நேற்று காலை காவிரி அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து வெள்ளிக்குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு, அதனை திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்து சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    கோவிலுக்குள் வந்தபின்னர், ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வெள்ளிக் குடத்தில் எடுத்து வரப்பட்ட புனிதநீர் தங்கக் குடத்திற்கு மாற்றப்பட்டு, யானை மீது வைத்து மேளதாளத்துடன் தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்க நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    முன்னதாக தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது.

    பின்னர், ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் ஆகியோர் தலைமையில் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. 
    Next Story
    ×