search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார்
    X
    காரைக்கால் அம்மையார்

    காரைக்கால் அம்மையார் விருப்பத்தை நிறைவேற்றிய ஈசன்

    காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்த தனதத்தன்- தர்மவதி தம்பதியரின் மகளாக பிறந்த காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்த தனதத்தன்- தர்மவதி தம்பதியரின் மகளாக பிறந்தவர், புனிதவதி. அவர் சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.

    ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளை பரமத்தத்தரிடம் கொடுத்தார். அந்தக் கனிகளை, வேலையாளின் மூலமாக தனது வீட்டிற்கு அனுப்பிவைத்தார் பரமதத்தர்.

    இந்த நிலையில் புனிதவதியின் சிவபக்தியை சோதிக்க எண்ணினார், சிவபெருமான். அவர் ஒரு சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி, புனிதவதியின் வீட்டு முன்பாக வந்து நின்றார். அவரை வரவேற்று அப்போது வீட்டில் இருந்த தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனியில் ஒன்றையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார், புனிதவதியை வாழ்த்திச் சென்றார்.

    சிவனடியார் சென்றதும், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார் பரமதத்தர். அவருக்கு பலவகை உணவுகளை சமைத்து பரிமாறினார் புனிதவதி. அதோடு மீதம் இருந்த மாங்கனியையும் இலையில் வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பியதில் மீதமிருக்கும் மற்றொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தர் கூறினார்.

    புனிதவதி பதறிப்போனார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தவர், நேரடியாக பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை வேண்டினார். அப்போது புனிதவதியின் கையில், ஒரு மாங்கனி வந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதை கணவருக்குக் கொடுத்தார்.

    ஆனால் முந்தையக் கனியை விட, இந்த மாங்கனி அதிக சுவையுடன் இருப்பதை அறிந்த பரமதத்தர் சந்தேகம் கொண்டார். ‘ஒரே மரத்தில் விளைந்த இரு மாங்கனிகளின் சுவை மாறுபடுமா?’ என்று நினைத்தவர், தன் மனைவியிடம் உண்மையை உரைக்கும்படி உத்தரவிட்டார்.

    புனிதவதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் கணவரிடம் கூறினார். ஆனால் அதை நம்ப பரமதத்தர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. “சிவபெருமான் உனக்கு கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை இங்கேயே வரவழைத்து காட்டு” என்று மனைவியை நிர்பந்தித்தார்.

    புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி அவரது கையில் வந்து அமர்ந்தது. அதைக் கண்டு வியந்துபோன பரமதத்தர், “நீ.. மனிதப் பிறவி அல்ல. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியல்ல” என்று கூறி புனிதவதியைப் பிரிந்து, பாண்டியநாடு சென்று அங்கு வணிகம் செய்தார். சில காலத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. அதற்கு பரமதத்தர், தன்னுடைய முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினார்.

    இந்த நிலையில் கணவரைக் காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக பாண்டியநாடு புறப்பட்ட புனிதவதி, பரமதத்தனின் இல்லத்தைச் சென்றடைந்தார். தன்னைத் தேடி வந்த புனிதவதியின் காலில் விழுந்து வணங்கிய பரமதத்தர், அதேபோல் தனது மனைவி, மகளையும் விழச்செய்தார்.

    கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத புனிதவதி, தனது அழகுமேனியை அழித்து பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே அருளாசி வழங்கினார். பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.

    கயிலாயம் புனிதமான இடம் என்பதால், காலை ஊன்றி நடக்காமல், தலையால் நடந்து சென்றார். இதைப் பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக.. அமர்க..” என்று அழைத்தார். மேலும் “உனக்கான வரத்தைக் கேள்” என்றார்.

    அதற்கு புனிதவதி அம்மை, “இறைவா.. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பிருந்தால் உனையென்றும் மறவாமை வேண்டும், எப்போதும் நீ ஆடும்போது உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்” என்று வரம் கேட்டார்.

    அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டினார். பின்னர் திருவாலங்காடு திருத்தலத்திற்கு வரச்செய்து, அங்கு தன்னுடைய திருவடியின் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார்.
    Next Story
    ×