search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி கோவிலில் மொட்டை போட முடியாது

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் மொட்டை போட அனுமதி இல்லை. புனித நீராடவும் அனுமதி கிடையாது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து வர அனுமதி இல்லை.
    83 நாட்களுக்கு பிறகு 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 8-ந் தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 8 மற்றும் 9-ந்தேதிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்களும், 10-ந்தேதி திருப்பதி, திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    11-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் பொது தரிசனத்தில் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா தொற்று அதிகமாக உள்ள சிவப்பு நிற மண்டலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    காலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

    திருப்பதி மலைப்பாதைகளில் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அரசு பஸ்கள், இதர வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பஸ்சும் கிருமி நாசினி தெளித்து இயக்கப்படும். ஒரு பஸ்சில் 30 முதல் 40 பக்தர்கள் வரை அமர வைக்கப்படுவார்கள்.

    தினமும் காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணிவரை குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளில் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். (முன்பு ஒரு நாளைக்கு சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்) ஒரு மணிநேரத்துக்கு 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    கோவிலில் தீர்த்தம், சடாரி வழங்கப்பட மாட்டாது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு ஒரு அறை ஒதுக்கீடு செய்து, அதில் 2 பக்தர்கள் மட்டும் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற மாநில பக்தர்கள் தங்கள் மாநில அரசிடம் இருந்து இ-பாஸ் பெற்று வருவது கட்டாயம்.

    அனைத்து பக்தர்களும் அலிபிரி சுங்கச்சாவடி பகுதியில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே திருமலைக்கு சாமி தரிசனத்துக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களின் வாகனங்களும் தீவிர பரிசோதனை செய்யப்படும். திருமலைக்கு வருவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும்.

    ரூ.300 டிக்கெட் பக்தர்கள், நேரம் ஒதுக்கீடு (டைம் ஸ்லாட்) டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    பக்தர்கள் மொட்டை போட அனுமதி இல்லை. புனித நீராடவும் அனுமதி கிடையாது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து வர அனுமதி இல்லை. அலிபிரி நடைபாதையில் தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே நடந்து வர அனுமதிக்கப்படுவார்கள். அலிபிரி நடைபாதை அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணிவரை திறந்து இருக்கும். அதற்கு மேல் மூடப்படும்.

    திருமலையில் கல்யாண கட்டாக்கள், அன்னதான கூடம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உணவு கவுண்ட்டர்கள் அமைத்து அன்னதானம் வழங்கப்படும்.

    11-ந் தேதி முதல் ஆர்ஜித சேவை டிக்கெட் பக்தர்கள், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருமலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    பக்தர்களை ஒழுங்குபடுத்தும் தேவஸ்தான ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து இருப்பார்கள்.

    வாணி அறக்கட்டளை பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் உள்ள வரதராஜசாமி, யோக நரசிம்மர், வகுளமாதாதேவி, விஸ்வசேனர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோவிலில் பக்தர்கள் 6 அடி தூர சமூக விலகலை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    கோவிலில் பக்தர்களுக்கு லகு தரிசனத்துக்கும், தங்க வாசலில் இருந்தபடியே நின்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குலசேகரபடி வரை செல்ல அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×