search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேதங்களை வெளிப்படுத்திய ரிஷிகள்
    X
    வேதங்களை வெளிப்படுத்திய ரிஷிகள்

    வேதங்களை வெளிப்படுத்திய ரிஷிகள்

    புராணத்தில் ரிஷிகள் பல வகைகளில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் சப்த ரிஷி எனப்படும் 7 பேர் மிகவும் முக்கியமானவர்கள்.
    ஆன்மிக அறிவால், பொருள் உலகத்தைக் கடந்த மிக உயர்ந்த மெய்பொருளை அடைந்தவர்களை ‘ரிஷி’ என்று அழைப்பார்கள். இவர்கள், தாங்கள் உணர்ந்த ஞானத்தையும் தத்துவத்தையும் பாடல்களாகவும், சுலோகங்களாகவும் வேதங்களில் வெளிப்படுத்தினார்கள். வேதங்களில் இருக்கும் துதிப்பாடல்களை இயற்றியவர்களில் பெரும்பாலானோர் ரிஷிகளே.. பிருகு, நாரதர், அகத்தியர் ஆகியோர் ரிஷிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    புராணத்தில் ரிஷிகள் பல வகைகளில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் சப்த ரிஷி எனப்படும் 7 பேர் மிகவும் முக்கியமானவர்கள். இந்த சப்த ரிஷிகள், ஒவ்வொரு மன்வந்திரத்தின் போது மாறுவார்கள். தற்போது நடைபெறும் மன்வந்திரத்தின் படி ‘அத்ரி, பரத்வாஜர், கவுதமர், ஜமதக்னி, காஷ்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்’ ஆகியோர் சப்த ரிஷிகளாக இருக் கிறார்கள்.

    பெண்களின் இதுபோன்றவர்களை ‘ரிஷிகா’ என்று குறிப்பிடுவார்கள், ரிக்வேத காலத்தில் ஏராளமான பெண் ரிஷிகளும் இருந்துள்ளனர். அவர்கள் அருளிய பாடல்களும், அந்த வேதத்தில் காணப்படுகின்றன. ரோமஷா, லோபமுத்திரை, அபலா, கத்ரு, விஸ்வாவரா, கோஷா, வகாம் பிரிணி, பவுலோமி, யமுனை, இந்திராணி, சாவித்திரி, தேவயாணி, நோதா, சிகதானிவவரி, கவுபயனா, அனுசூயை ஆகியோர் ரிஷிக்களில் மிகவும் முக்கியமானவா்கள்.

    * அத்ரி - ரிக் வேதத்தின் ஐந்தாவது மண்டலப் பாடல்களை அருளியவர். தத்தரேயர் மற்றும் துருவாசரின் தந்தை. இவரின் மனைவி அனுசூயை தேவி.

    * பரத்வாஜர் - ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவர் துரோணாச்சாரியாரின் தந்தை ஆவார்.

    * கவுதமர் - கோதமர் என்றும் அழைக்கப்படுகிறார். ரிக் வேதத்தின் நான்காவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவிதான் அகலியை.

    * ஜமதக்னி - சாஸ்திரங்களிலும் தற்காப்புக் கலையிலும் தேர்ந்தவர். பரசுராமரின் தந்தை.

    * காஷ்யபர் - ‘கஷ்யப்ப சம்ஹிதை’ எனும் ஆயுர்வேத நூலை இயற்றியவர். இவரின் பிறப்பிடமான காஷ்மீருக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.

    * வசிஷ்டர் - ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அருந்ததி. இதனால் அவர் ‘அருந்ததிநாதன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    * விஸ்வாமித்ரர் - ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலப் பாடல்களை அருளியவர். காயத்ரி மந்திரத்தை பரமாத்மனிடம் இருந்து பெற்று வேதத்தில் வெளிப்படுத்தியவர். இவரின் மகள் சகுந்தலை.

    * அகத்தியர் - சித்தர்களில் மூத்தவர். அகத்திய சம்ஹிதை எனும் அரும்பெரும் நூலை அருளியவர். அகத்தியம் எனும் தெய்வ தமிழிலக்கண நூலை அருளியவர். இவரின் மனைவி லோபமுத்திரை.

    * புலஸ்தியர் - விஷ்ணு புராணத்தை அருளியவர். குபேரன், ராவணன் ஆகியோரின் பாட்டனார்.

    * அங்கிரஸ் - அதர்வண வேதத்தின் பல பாடல்களை அருளியவர். பிரகஸ்பதியின் தந்தை.

    * பிருகு - பிருகு சம்ஹிதை எனும் ஜோதிட நூலை அருளியவர்.
    Next Story
    ×