search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம், தீர்த்தவாரி உற்சவம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மேள, தாளம் முழங்க விருத்தாசலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள தெப்பகுளத்துக்கு சாமி, ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் தெப்பகுளத்தில் சாமி எழுந்தருளினார். பின்னர் அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் பாலகிரு‌‌ஷ்ணன், மங்கலம்பேட்டை ராஜா தாமரைபாண்டியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×