search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.
    X
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.

    இதையொட்டி வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அந்த கொடிப்பட்டத்தை சின்ன சுப்பிரமணியன் அய்யர் கையில் ஏந்தியவாறு, தெய்வானை யானை மீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றடைந்தார்.

    விழாவில் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்த், மாரிமுத்து, உள்துறை மேலாளர் விஜயன், மணியம் ரமேஷ், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை அபிவிருத்தி சங்க தலைவர் ராமச்சந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×