search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை கிரிவலம்
    X
    திருவண்ணாமலை கிரிவலம்

    திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது ஆசி தரும் சித்தர்கள்

    கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும்.
    திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை.

    பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு மேல் கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

    கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது.
    இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். அவர் வடிவம் எடுத்தோ அல்லது வடிவம் எடுக்காமல் அரூபமாக கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.

    கார்த்திகை தீபம் நாளன்று அவர் சிலருக்கு காட்சிக் கொடுத்ததாக கூட கூறப்படுவது உண்டு. அந்த சித்த புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டாலே போதும், நம் பாவங்கள் விலகி, நம் ஆத்மா தூய்மைப் பெற்றுவிடும். அது மட்டுமல்ல அந்த சித்தரின் தரிசனப் பாக்கியம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது இடைக்காடர் பற்றி நினைத்தப்படி செல்லுங்கள். அவர் ஆசி வேண்டும் என்று கேளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக இடைக்காடர் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

    இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள்.

    வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.
    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. எனவே கிரிவலம் செல்லும் போது ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரையும் நினைத்துக் கொண்டே நடந்தால் நல்லது நடக்கும்.

    சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணாமலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. கிரிவலம் செல்லும் போது, ''ஸ்ரீ உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலை ஈசனே போற்றி“ என்று வணங்கி விட்டு ''ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம்“ என்று சொல்லி பூக்களைத் தூவி வழிபட வேண்டும். கிரிவல பக்தர்களின் காலில் அந்த பூக்கள் படாதபடி சாலையோரமாக நன்கு உள்ளே தள்ளி பூக்களை தூவி அந்த சித்தரை நினைத்து வழிபட வேண்டும்.

    இப்படி வழிபாடு செய்தால் ஸ்ரீபெத்த நாராயண சித்தர் ஏராளமான நற்பலன்களை அள்ளித்தருவார் என்கிறார்கள். அதுபோல சீனந்தல் சிவப் பெருவாளச் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். ஆடி மாதம் கிரிவலம் செல்லும் போது இவரை வழிபட்டால் உணவகம், காய்கறி, மளிகைக்கடை வைத்து இருப்பவர்களின் வியாபாரம் அதிக லாபம் தரும் வகையில் அமோகமாக நடைபெறும் என்பது ஐதீகம். அன்ன துவேஷம் காரணமாக சரியாக சாப்பிட முடியாதவர்கள் ஆடி மாதம் சிவராத்திரி தினத்தன்று கிரிவலம் சென்றால் உடனடியாக குணமாகும். மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும்.

    திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார். மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

    ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும்.

    இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும். அடுத்த தடவை நீங்கள் கிரிவலம் செல்லும் போது யாராவது ஒரு சித்தர் பற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்து பாருங்கள். அடுத்த பவுர்ணமி கிரிவலத்துக்கு நீங்கள் செல்லும் முன்பு நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து இருக்கும்.
    Next Story
    ×