search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது

    தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்குகிறது.
    தஞ்சை பெரியகோவில் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, நந்திபெருமான், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, கருவூரார், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

    இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிருநாளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் தடுப்புக் கம்பிகள், வண்ண மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 1-ந்தேதி(சனிக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. மொத்தம் 8 கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) கணபதி ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் பிரவேசபலி நடைபெறுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) சாந்திஹோமம் நடைபெறுகிறது.

    30-ந்தேதி (வியாழக்கிழமை) மூர்த்தி ஹோமம், சம்ஹிதாஹோமம் நடைபெறுகிறது. மாலையில் வாஸ்துசாந்தி நடைபெறுகிறது. 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, தீர்த்த சங்கிரஹணம் ஆகியவை நடைபெறுகிறது. 1-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 5-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    Next Story
    ×