search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவையொட்டி நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    விழாவையொட்டி நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.

    பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

    பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    கோவையை அடுத்த பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந்தேதி வரை திருவெம்பாவை உற்சவம் மற்றும் மாணிக்க வாசக சுவாமிகள் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பட்டீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து வந்தது.

    நேற்று முன்தினம் இரவு அம்மன் கிளி வாகன சேவையும், அன்னூஞ்சல் நிகழ்ச்சியும், சோமஸ்கந்தர் திருவீதி உலாவும் நடந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் நடராஜர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதைத்தொடர்ந்து காலசந்தி பூஜை நடத்தப்பட்டு நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், சடையனார் ஆகிய மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், நெய், பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ருத்ரகலச தீர்த்தாபிஷேகமும் நடந்தது.

    காலை 6 மணியளவில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு சுவாமி உள்வீதி பிரகாரத்தில் வலம் வர செய்து, ராஜகோபுரம் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டார். அதன்பின்னர் அரசமர மேடையில் 3 முறை வலம் வந்து பட்டிசுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து மேள-தாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. அப்போது நடராஜர், சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர்அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×