search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய நம்பெருமாளை வழிபட்டனர்.
    108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டும் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர்.

    இதைத்தொடர்ந்து நள்ளிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக கற்பூர படியேற்ற சேவை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×