search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா
    X
    சீரடி சாய்பாபா

    சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள்

    சீரடி சாய்பாபா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றில் சிலவற்றை விரிவாக பார்க்கலாம்.
    தண்ணீரில் விளக்கு எரிந்தது

    சீரடியில் பாபா தங்கி இருந்த இடத்தில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அந்த அகல் விளக்குகளுக்கு, அங்கேயிருந்த வியாபாரிகள் எண்ணெய் வழங்கிக் கொண்டு இருந்தார்கள். பாபாவின் மீது பொறாமை கொண்ட சிலர், அந்த வியாபாரிகளிடம் சென்று இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, இனிமேல் நீங்கள் எண்ணெய் தர வேண்டாம். பாபா உங்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். அதை நம்பிய வியாபாரிகளும் விளக்கு எரிய தேவையான எண்ணெய் தருவதை நிறுத்தி விட்டார்கள். ஒருநாள் விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல் தவித்தனர்.

    இதை பாபாவிடம் சென்று தெரிவித்தார்கள். பாபாவின் ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார். அவருக்கு சிரிப்பு தான் வந்தது. இனிமேல் நமக்கு எண்ணெய் வேண்டாம். தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் பாபா. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.

    பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார். பக்தர்கள் தயங்கியபடியே அவ்விதமே செய்ய, அகல் விளக்குகள் எண்ணெய்யில் எரிவதை விட பிரகாசமாக எரிந்தன. இதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இதைக் கேள்விப்பட்ட வியாபாரிகள் தங்கள் தவறை உணர்ந்து பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

    அந்தரத்தில் தூங்கிய பாபா

    சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார். தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார். இதைக் கண்ட பக்தர்கள் பாபா இப்படி ஒரே துணியைப் பயன்படுத்துகிறாரே என்று வருந்தினார்கள். இதனால் அவர்கள் பாபா படுத்து உறங்க ஐந்து அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகையைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்து, பாபா இனிமேல் நீங்கள் இந்தப் பலகையில் தான் படுத்து உறங்க வேண்டும் என்று வேண்டினார்கள். பாபாவும் பக்தர்களின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். பக்தர்கள் கொடுத்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்று அடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்திலும் அந்தரத்தில் இருக்குமாறு செய்து படுத்துக் கொள்வார். இந்த அதிசயத்தைக் கண்டு பாபாவின் மகிமை மேலும் மேலும் பரவியது.

    3 நாள் உயிர் இல்லாத உடல்

    பாபா ஒரு நாள் தமது சீடர் மஸல்சாபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மஹல்சாபதியிடம் நான் கடவுளைப் பார்த்துவிட்டு வர வேண்டும். நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார். நான் போய்வர மூன்று நாட்களாகும். மூன்று நாட்களில் திரும்பி வந்து நான் எனது உடலில் நுழைந்து உயிர் பெறுவேன் என்றும் பாபா கூறினார். மஹல்சாபதியும் அப்படியே ஆகட்டும் என்றார். பாபா சொன்னபடி அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. உயிரில்லாத உடலை மஹல்சாபதி பாதுகாத்து வந்தார். இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து மக்கள் அங்கே திரளாக கூடி விட்டனர்.

    இது தொடர்பாக விசாரிக்க உயர் அதிகாரிகளும் வந்து விட்டனர். அதிகாரிகள் பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார். எனவே அவரது உடலை அடக்கம் செய்து விடலாம் என்றனர். ஆனால் பாபாவின் சீடர் மஹல்சாபதி அதற்கு சம்மதிக்க வில்லை. பாபாவின் அருள்வாக்கு இதுவரையிலும் பொய்யானதே இல்லை. அதனால் யாரும் அவரது உடலைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    உயர் அதிகாரிகள் கோபம் கொண்டு, நீங்கள் சொன்னது போல் மூன்று நாள் கழித்து நான்காவது நாள் பாபா உயிர் பெறாவிட்டால் நாங்களே பாபாவின் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மஹல்சாபதியை எச்சரித்து விட்டுச் சென்றனர். மஹல்சாபதி சொன்னபடி மூன்று நாட்கள் கழிந்தன. நான்காவது நாள் காலையில் எல்லோரும் பாபாவின் உடல் அருகே கூடி விட்டனர். அப்போது பாபா சொன்னபடியே அவரது உயிரற்ற உடல் உயிர் பெற்று எழுவதைக் கண்டனர். பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர். பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.
    Next Story
    ×