search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரையும், விளக்கு பூஜை நடந்ததையும் படத்தில் காணலாம்.
    X
    தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரையும், விளக்கு பூஜை நடந்ததையும் படத்தில் காணலாம்.

    பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர்

    பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.
    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று புரட்டாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.

    அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இதில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது.
    Next Story
    ×