search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி பிரம்மோற்சவம்
    X
    திருப்பதி பிரம்மோற்சவம்

    திருப்பதியில் 1400 ஆண்டுகளாக நடக்கும் பிரம்மோற்சவ விழா

    பூலோக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதியில் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பிரம்மோற்சவ விழா...

    பூலோக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதி சென்றால் திருப்பம் தரும் தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    திருப்பதியின் வரலாறு பல அதிசயங்களை கொண்டது. கிருஷ்ணா வதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர்.

    மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார்.
    லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.

    திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கட மலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந் தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் பசுவை விற்க சென்றாள்.

    மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள்.

    திருமாலும் அன்புடன் வகுளாதேவியை அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.
    தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு.

    எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமா ளுக்கும், பத்மாவ திக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப் பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

    இதைக் கண்ட மகாலட்சுமியும் பத்மாவதியும் தாங்களும் கல்லாகச சமைய, வலது திருமார்பில் மகாலட்சுமியும், இடது திருமார்பில் பத்மாவதியும் குடி கொண்டார் கள். அனை வரும் அயர்ந்து நோக்க அப்போது அங்கு வந்த பிரம்மாவும் சிவனும், இவை யாவுமே திருமாலின் திருவிளையாடல்கள் என்பதையும் ஏழுமலை களில் கோவில் கொள்வதற்காகவும் கலியுகத்தில் பக்தர்களின் குறைகளை போக்குவதற்காகவுமே இப்படிப்பட்ட திருவிளையாடல்களை நடத்தினார் என்பதையும் எடுத்து கூறினர்.

    பெருமாள் தம்முடைய நாச்சியமார்களோடு அருள்கோவில் கொண்டுவிட பிரம்மதேவர் முறைப்படி உற்சவம் நடத்தினார். கலிகாலத்தில் மக்கள் பலவிதமான துன்பங்களால் அவதியுறுவர் என்பதாலும், அப்படிப்பட்ட அவதிகளிலிருந்து அவர்களை காப்பாற்று வதற்காகவே முன்னதாக வந்து வெங்கடேசனாக எழுந்தருளி விட்டார் என்பதாலும, மிக பெரிய விழா எடுத்து எம்பெருமானை வணங்கினர். அதுவே பிரம்மோற்சவம் ஆனது.

    பிரம்மாவால் முதன் முதலில் செய்யப்பெற்றது என்பதாலும் மிகப் பெரியது என்பதாலும் இப்பெருவிழா, பிரம்மோற்சவம் என்றே இப்போதும் அழைக்கப்பெறுகிறது.
    கி.பி.614-ம் ஆண்டு முதல் பிரம்மோற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 1400 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
    Next Story
    ×