search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.
    X
    யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் சங்கரநாராயண அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, தெய்வானை யானை மீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.

    விழாவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, ஆய்வாளர் முருகன், 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க இணை தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×