
63 நாயன்மார்களுக்கு காலையில் சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடந்தது. அவர்களுக்கு பின்னால் 63 நாயன்மார்கள் அணிவகுத்து ஊர்வலமாக வந்தனர். வீதிஉலா முடிந்ததும் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கைலாசம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு மட்டும் கைலாசம் செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும், சேரமான் நாயனாருக்கு அனுமதி இல்லை என்று கூறி அவரை நந்தி பகவான் தடுத்ததாகவும், இதற்காக மீண்டும் சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே வந்து சேரமான் நாயனாரை கைலாசம் அழைத்து சென்றதாக புராண வரலாறு கூறுகிறது. அதை நினைவு கூறும் வகையில், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை கைலாசம் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இருவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து சுவாமி சன்னதி பிரகாரத்தில் கைலாச மலையில் சுவாமி, அம்மாள் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அந்த இடத்துக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சேரன்மான் நாயனாரை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், பேஸ்கார் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.