search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன்
    X
    சமயபுரம் மாரியம்மன்

    சமயபுரம் கோவிலில் வித்தியாசமான பித்ரு பூஜை

    திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை அன்று வித்தியாசமான முறையில் பித்ரு பூஜை செய்யப்படுகிறது.
    திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை அன்று புதிய வட்டமான மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசனிக்காய் வைத்து, அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு, பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஓர் அந்தணரிடம் தட்சினை (பணம்) கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலியிடம் கொடுத்து, அவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்று அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள். இதே போல் சில கோவில்களிலும் இந்த பிதுர் பூஜை நடைபெறுகிறது.

    தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கண்டியூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் என்பர். இத்தலத்தில் கவுசிக முனிவரின் வேண்டுகோளுக்கேற்ப, காசி கங்கை உட்பட பதின் மூன்று கங்கைகளும் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தனவாம். மேலும் ஆடி அமாவாசையன்று இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்த நாளில் இங்கு வழிபாடு செய்தால் பிதுர்தோஷம் நீங்கும். முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தற்பொழுது சதுரகிரிமலையிலுள்ள சுந்தர மகாலிங்கர் ஆலய அடி அமாவாசை விழா விளங்குகிறது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாய் கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பவுர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டாலும், ஆடி அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது.

    அந்த நாளில் இந்த மலை உச்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாகவே பக்தர்கள் தகுந்த உணவு, பாதுகாப்பாக மருந்து, மாத்திரையுடன் வந்து விடுகிறார்கள். அடி வாரத்திலிருந்து சுமார் நான்கு மணி நேரம் பயணித்து மகாலிங்க சுவாமியைத் தரிசித்து விட்ட நிலையில், தங்கள் துன்பங்களும் பாவங்களும் நீங்கியதாக உணர்கிறார்கள்.

    ஆடி அமாவாசையன்று நடைபெறும் பிதுர் பூஜைக்குரிய பொருட்களை மலையடிவாரத்திலிருந்தே வாங்கிச் சென்று இறைவனின் சந்நிதியில் சமர்ப்பித்து தங்கள் முன்னோர்களையும் மறைந்த பெற்றோர்களையும் நினைவு கூர்ந்த வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆசி கிட்டும் என்பதுடன் பிதுர்தோஷமும் விலகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
    Next Story
    ×