search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.
    X
    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழையகாயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட் டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவில் கேடய சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் வில்லிசை, பொம்மலாட்டம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை போன்றவை நடக்கிறது.

    விழாவின் சிகர நாளான வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

    11-ம் நாளான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சி, திருக்கற்பூர தீபதரிசனம் நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மதியம் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல்சேவை, இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்களதரிசனம் நடக்கிறது.
    Next Story
    ×