search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    அருணாசலேஸ்வரர் கோவில்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந்தேதி தொடங்குகிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் முக்கியமானவை.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.50 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அப்போது பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்படும்.

    விழாவை முன்னிட்டு 24-ந் தேதி (புதன்கிழமை) காலையும், மாலையும் விநாயகர் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடக்கிறது.

    தொடர்ந்து 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவில் பராசக்தி அம்மன் வீதி உலாவும் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீ மிதி விழாவும், பராசக்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×