search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்ளில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விஷேச நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதம் பவுர்ணமியுடன் தொடங்கியது. நேற்று மதியம் 3.10 மணிக்கு தொடங்கிய பவுர்ணமி, இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி வரை உள்ளது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையாகும் இதனால் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதிய வண்ணம் இருந்தது. அதன் காரணமாக கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கடுமையாக வெயில் கொளுத்தியது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். காலணி இல்லாமல் நடந்ததால் சூடு தாங்க முடியாமல் பலர் நிழல் இருக்கும் இடத்தை பார்த்து ஓடி, ஓடிச் சென்று நின்று கொண்டனர். சூடு தணிந்ததும் மீண்டும் நடக்க தொடங்கினர். இரவு 8 மணி வரை குறைந்த அளவிலான பக்தர்களே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமானது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலிலும், கிரிவலப் பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்றும் பிற்பகல் 3 மணி வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.
    Next Story
    ×