search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருளிய காட்சி.
    X
    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருளிய காட்சி.

    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா

    வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சனி தோ‌‌ஷம் நீங்க வேண்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த கோவிலின் வைகாசி விசாக ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிரம்மோற்சவத்திற்கான கொடி ஏற்றப்பட்டு, செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ரி‌‌ஷப வாகனத்தில் சகோபுர வீதி உலா மற்றும் தேரோட்டமும் நடந்தது.

    ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது மட்டுமே காணக்கிடைக்க கூடிய அரிய நிகழ்ச்சியான தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடந்தது. சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் விடிய, விடிய வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலின் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    Next Story
    ×