search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள்-தாயார் சேர்த்தி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.
    X
    நம்பெருமாள்-தாயார் சேர்த்தி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    பங்குனிமாதம் நடைபெறும் உற்சவம் என்பதால், வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் சிரமப்படாமலிருக்க இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், தாயார் சன்னதியில் 12 இடங்களில் குளிர் சாதன வசதிகளும், 30 இடங்களில் மின் விசிறிகளும் வைத்து குளுமையூட்டப்பட்டது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டும் வழங்கப்பட்டது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில் பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (சனிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×