search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனம் குளிர்ந்த அக்னி தேவன்
    X

    மனம் குளிர்ந்த அக்னி தேவன்

    ராமேஸ்வரம் ஆலயத்தின் முன்பாக உள்ள கடலை, ‘அக்னி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதற்கு ஒரு சிறு கதை இருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.
    தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் விளங்குகிறது. இங்கு ஆலயத்தின் முன்பாக உள்ள கடலை, ‘அக்னி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். குளிர்ச்சியாக இருக்கும் கடல் நீருக்கு ‘அக்னி தீர்த்தம்’ என்று எதற்கான பெயர் வந்தது என்று சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு சிறு கதை இருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

    ராமபிரானின் மனைவி சீதாதேவி, வனத்தில் வசித்த போது சூழ்ச்சி செய்து ராவணனால் கடத்தப்பட்டாள். இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமபிரான், ராமேஸ்வரம் வந்தார். பின்னர் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை மீட்டு வந்தார்.

    தன் மனைவியைப் பற்றி ராமருக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மக்களிடம் இருந்து வீண் விமர்சனங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காக, தன் மனைவி சீதை களங்கமற்றவள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக அவளுக்கு அக்னி பரீட்சை வைத்தார் ராமன்.

    சீதை கணவனின் மனதை அறிந்தவள் என்பதால், சற்றும் தயங்காமல் லட்சுமணனை அழைத்து அக்னி குண்டம் தயார் செய்யும்படி கூறினாள்.

    ஆனால் லட்சுமணன் தயங்கினான். அப்போது சீதை, “நாம் வனவாசம் புறப்படும் பொழுது, உன்னுடைய தாயார் சுமித்திரை, என்னையும் உன் தாய் போலவே காக்க வேண்டும் என்று கூறியது உன் நினைவில் இல்லையா? உன்னுடைய தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன், சீக்கிரமாக அக்னி குண்டத்தை தயார் செய்” என்றாள்.

    இப்போது லட்சுமணனுக்கு வேறு வழி தென்படவில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டு, விறகு கட்டைகளை எடுத்து வந்து, தீமுட்டி அக்னி குண்டம் தயார் செய்தான்.

    தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்தது. அதன் முன்பாக வந்து நின்ற சீதை, “அக்னி தேவனே! நான் உனக்குள் இறங்கு கிறேன். நான் கற்புடையவள் என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு” என்றபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.

    அக்னிக்கு மகிழ்ச்சி. மகாலட்சுமியின் வடிவான சீதை தேவி, தனக்குள் இறங்கியதும் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அக்னி தேவன் தன்னுடைய வெப்பத்தை விடுத்து குளிர்ந்து போனான். மனித உருவெடுத்த அவன், சீதையை அக்னிக்குள் இருந்து தன் கைகளில் ஏந்தி வந்து ராமனிடம் ஒப்படைத்தான். “தர்மத்தின் பத்தினியான இவளை என்னால் ஒரு போதும் எரிக்க முடியாது” என்று கூறி அங்கிருந்து மறைந்தான்.

    இந்த அற்புத நிகழ்வை அக்னி பகவான் நிகழ்த்தியது, ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் என்பதால் ராமாயண இதிகாசமும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தல வரலாறும் சொல்கிறது. எனவே தான் ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ ஆனது. அக்னியின் மனம் குளிர்ந்த காரணத்தால், அவன் பெயர் தாங்கிய அந்தக் கடலும் அமைதி தவழ காட்சி தருகிறது. இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடினால், பக்தர்கள் பாவமற்றவர்களாக மாறுவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
    Next Story
    ×