search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் ஆகிய இடங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க தங்கம், வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர், 5-ம் பிரகாரம் விநாயகர் சன்னதி மற்றும் இரணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    நேற்று காலை 8.30 மணிக்கு யாகசாலையில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், யஜமானர்கள் சங்கல்பம், அனுக்ஞை, நவக்கிரகஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8 மணிக்கு மேல் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) 8.30 மணிக்கு பரிவார யாகசாலை பூஜை ஹோமமும், காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5.30 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு யாகசாலை, ஹோமம் ஜபம் பாராயணமும் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் (புனித நீர் குடங்கள்) புறப்பாடு நடக்கிறது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி சன்னதி விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றுவார்கள். இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    காலை 9 மணிக்கு மகாலட்சுமி தீபாராதனையும், காலை 10.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பிரதான மூர்த்திகள் யாகசாலை பிரவேசத்தை தொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 
    Next Story
    ×