search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி புஷ்கரம்: நீராடல் விதிகள்
    X

    தாமிரபரணி புஷ்கரம்: நீராடல் விதிகள்

    புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும்.
    12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம். புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும். அவைகளை வரிசையாகப் பார்ப்போம்.

    1.  சூரிய உதயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் (96 நிமிடம்) அருணோதய காலமாகும். அப்பொழுது நீராடுவது சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது காலை 4.24 மணி முதல் 6.00 மணி வரையில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்பட்டு உள்ளது.

    2.  இந்த 96 நிமிடத்திலும் காலை 4.24 முணி முதல் 5.12 மணி வரையிலான 48 நிமிட காலம் மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. 4.24 மணி முதல் 5.12 மணி வரை உள்ள இரண்டு நாழிகைகள் “பிரம்ம முகூர்த்தம்” என்று சொல்லப்படும். இதை பிரசாந்தவேளை என்பர். மனித மனம் அலைபாயாமல் பரிசுத்தமாக இருக்கும் வேளை இது. பிரகிருதியிலே இயற்கையிலேயே பகவானால் பிரத்தியேகமாக செய்து வைத்தது பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த வேளையில் 15 நிமிடம் தியானம் செய்தால், மற்ற வேளையில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்குச் சமமாகும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது ஒரு தனி ஆனந்தம். ஏன்? நம் உள்ளத்தில் கடவுள் பக்தி மேலோங்கி இருக்கும் வேளை இது.

    3.  குழந்தைகள், வியாதியினால் பீடிக்கப்பட்டவர்கள், வயது ஆனவர்கள் சமயத்திற்குத் தகுந்தவாறு பகலில் நீராடலாம். ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

    4.  புண்ணிய நதிகளில் நீராடப் போகிறவர்கள் குடை பிடித்துக் கொண்டோ, செருப்பு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது. கார், வேன், இருசக்கர வாகனங்களில் போய் நதிக்கரையில் இறங்கக் கூடாது. நடந்து செல்ல வேண்டும். குடை பிடித்துக் கொண்டு சென்றால் தீர்த்தத்தில் நீராடிய பலனில் கால் பங்கும், செருப்பணிந்து சென்றால் அரைப்பங்கு பலமும், வண்டி வாகனங்களில் சென்றால் முழு பலமும் நசித்து விடுகிறது. நோயாளியாக இருந்தால் குதிரை வண்டியில் போகலாம். மாட்டு வண்டியில் போகக் கூடாது.

    5.  நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டு நதியை வணங்கி மெல்ல அதனுள் இறங்க வேண்டும். புண்ணிய நதிகளில் நீச்சலடித்து குளிக்கக் கூடாது. நீச்சலடிப்பதன் மூலம் நதியைக் காலால் உதைக்க நேரிடும். நதியை உதைக்கலாமா? இது பாபச் செயல் அல்லவா?

    6.  தூய்மையான வெண்ணிற ஆடை உடுத்திக் கொண்டே நீராட வேண்டும். ஒற்றை வஸ்திரத்தோடு நீராடக்கூடாது. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

    7.  சிகப்பு, கருப்பு, நீல நிறத் துணி, தலைப்பு இல்லாத வஸ்திரம், ஈரமான வஸ்திரம் இவைகளை ஒரு பொழுதும் உடுத்திக் கொண்டு நீராடக் கூடாது. ஓரத்தில் நீலக் கரை, கருப்புக்கரை போட்ட வஸ்திரமும் உடுத்திக் கொள்ளக் கூடாது. கைலிகள், லுங்கிகள் உடுத்தக் கூடாது.

    8.  அரைஞாண் கயிறு (இடுப்புக் கயிறு) இல்லாமல் ஆண்கள் நீராடக் கூடாது. அப்படிச் செய்பவன் நதியில் நீராடிய புண்ணிய பலனைப் பெற மாட்டான்.

    9.  அரை ஞாண் கயிற்றில் கச்சம் கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வஸ்திரம் தரிக்காதவருக்குச் சமம். இதனாலும் புண்ணிய பலன் கிட்டாமற் போய் விடும்.

    10.  நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. இது பாபமாகும்.

    11.  புனித நீராடல் முதலிய சகல காரியங்களிலும் நாராயணனை அவசியம் தியானம் செய்ய வேண்டும். நீரில் நின்று கொண்டு மனதில் வேறு எண்ணம் இல்லாமல் “ஹரி, ஹரி” என்று சொல்லிக் கொண்டு மூன்று முறை நன்கு மூழ்கி எழ வேண்டும். லக்ஷ்மி சூக்தம் தெரிந்தவர்கள் அதைக் கூறலாம். வலது கையால் நீரை எடுத்து மூன்று முறை அருந்த வேண்டும்.

    12.  நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. தலைமுடியில் உள்ள நீர் முன்புறமாக விழுந்தால் அது கங்கை தீர்த்தத்திற்குச் சமமாகும். பின்புறம் விழுந்தால் அது கள்ளுக்குச் சமமாகும். ஆகையால் முன்புறமாக குனிந்து கொண்டு தலைமுடியில் உள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்.

    13.  நதியில் நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்வதும், அதில் சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

    14.  நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

    15.  நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம் உள்ள செல்வமெல்லாம் தொலைந்து தரித்திரராகி விடுவார்.

    16.  நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

    17. நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ பூசிக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.
    Next Story
    ×