search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அவ்வையார்அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சி.
    X
    அவ்வையார்அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சி.

    அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை படைத்து வழிபாடு

    ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை படைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
    ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் இருந்து வாகனங்களில் வந்த பெண்கள் கோவில் வளாகத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்கள் மூலம் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    இங்கு ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் இடம் இல்லாமல் அருகில் உள்ள தோப்புகளில் பெண்கள் உணவு பதார்த்தங்களை தயாரித்தனர்.

    மேலும் கோவிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மேலும், நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் வழியாகவும், செண்பகராமன்புதூர் வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாய்க்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இந்த கோவிலில் வருகிற 25-ந் தேதி பூக்குழி கொடை விழா நடக்கிறது. இதையொட்டி கால்கோள் விழாவும் நேற்று நடந்தது.

    இதுபோல், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கொட்டாரம் முத்தாரம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    Next Story
    ×