search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணசாமி கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வருவதை காணலாம்.
    X
    கிருஷ்ணசாமி கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வருவதை காணலாம்.

    கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவிலில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் சுவாமி வாகனங்களில் வீதியுலா காட்சிகள், அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாள் திருவிழாவான நேற்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி கோவிலில் இருந்து சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் தேரோடும் வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தது.

    தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 8 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி பரிவேட்டைக்கு எழுந்தருளலும், இரவு 9 மணிக்கு சாமி திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு ஒழுகினசேரி பழையாற்றின் கரையில் சாமிக்கு ஆறாட்டு பூஜையும், விஸ்வகர்ம ரதம் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு சுவாமி தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×