search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் நடுவே தேர் அசைந்தாடி வந்தகாட்சி.
    X
    ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் நடுவே தேர் அசைந்தாடி வந்தகாட்சி.

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    தஞ்சையை அடுத்த திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் பல்லக்கில் சாமி வீதிஉலாவும், இரவில் ஆதிசேஷவாகனம், பூதவாகனம், கைலாசவாகனம், காமதேனுவாகனம், யானைவாகனம், குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.


    இதைத்தொடர்ந்து தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பழனம், பொன்னாவரை, கல்யாணபுரம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.



    தேர் திருவையாறு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று கீழவீதியில் உள்ள தேர்நிலையை வந்தடைந்தது. மதியம் அன்னதானமும், இரவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு பணியில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழாவையொட்டி 11-ந் தேதி காலை ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர்-சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று அன்று இரவு 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் உள்ள காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது. பின்னர் வாணவேடிக்கை நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் சேர்த்து 7 ஊர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியை வந்தடைகிறது. அங்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாக்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×