search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தையாசாமி கோவில் திருவிழாவில், தரையில் விழுந்து வணங்கி பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்ட காட்சி.
    X
    முத்தையாசாமி கோவில் திருவிழாவில், தரையில் விழுந்து வணங்கி பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்ட காட்சி.

    முத்தையாசாமி கோவிலில் திரளான பெண்கள் தரையில் விழுந்து வணங்கி நூதன வழிபாடு

    திட்டக்குடி அருகே முத்தையாசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரையில் விழுந்து வணங்கி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
    திட்டக்குடி அடுத்த பெருமுளையில் பழமை வாய்ந்த முத்தையாசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து கோவிலில் தினசரி சிறப்பு பூஜை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் முத்தையாசாமிக்கு பால் அபிஷேகம் நடந்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடிகள் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ராயப்பர், பூமாலையப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ராயப்பர், முத்தையாசாமி, பூமாலையப்பர் சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு மற்றும் தேரில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிவப்புகுதிரை வாகனத்தில் எழுந்தருளிய ராயப்பர் ஊர்வலமாக கிராமத்தின் எல்லையில் உள்ள எதுபதியம் கோவிலை வந்தடைந்தார். அங்கு ராயப்பருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதையடுத்து ராயப்பர் மீண்டும் ஊர்வலமாக முத்தையாசாமி கோவிலுக்கு வந்தார். அப்போது விழாவில் கலந்து கொண்ட திரளான பெண்கள் வழிநெடுக தரையில் விழுந்து வணங்கி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும், திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×