search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள் மழை பொழியும் பெரிய மாரியம்மன்
    X

    அருள் மழை பொழியும் பெரிய மாரியம்மன்

    வரங்களை அள்ளித்தரும் பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மனை மனதில் வழிபட்டு எல்லா நலமும், வளமும் பெறுவோம்.
    உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் கருதாது, வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவர் மாரியம்மன்.

    அப்படிப்பட்ட அருளை வாரி வழங்கும் அன்னையாக ஈரோடு மாநகரில் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீபெரிய மாரியம்மனுக்கு பங்குனி மாதத்தில் விழா எடுக்கப்படுகிறது.

    கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுக்கும் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் பெரிய மாரியம்மன். ஈரோடு மாநகரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் (நடுமாரியம்மன்) என்று 3 இடங்களில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார்.

    பெரிய மாரியம்மன் ஈரோடு பிரப்ரோட்டில் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரிலும், சின்ன மாரியம்மன் ஈரோடு பெரியார் வீதியிலும், காரைவாய்க்கால் மாரியம்மன் காரைவாய்க்கால் பகுதியிலும் பக்தர்களை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள்.

    தீமைகளை விரட்டும் தெய்வமாக அம்மன் உறைந்திருக்கும் பெரிய மாரியம்மன் கோவில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களாக 3 கோவில்கள் மட்டும் இருந்தாலும், இந்த பங்குனி விழா நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் திருவிழாவாகவே இருக்கிறது. பெரிய மாரியம்மன் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவது வழக்கம்.



    திருவிழாவையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இந்த கோவில்களில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றிச்செல்வது பரவசப்படுத்தும் நிகழ்வாகும். பக்தர்கள் உடலை வருத்தி அலகுகள் குத்தியும், தீச்சட்டிகள் ஏந்தியும் கலங்கிய இதயத்தை அமைதிப்படுத்த பல விரத முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

    பெரிய மாரியம்மன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வரங்களை மழையாக அளிக்கிறார். எனவேதான் பக்தர்கள் விரதம் இருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுகிறார்கள். இளநீர், பால் ஆகியவையும் விடப்படுகின்றன.

    குறிப்பாக பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையின் போது வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கூழ் ஊற்றுவது வழக்கம்.

    கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற கம்பம் நடப்பட்டது முதல் பிடுங்குவது வரை இடை விடாது பக்தர்கள் காத்திருப்பது என்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அம்சமாகும்.

    இதுபோல் கம்பம் பிடுங்கும் விழாவன்று ஈரோடு மாநகரமே விழாக்கோலம் பூண்டு, அனைத்து மக்களும் மஞ்சள் நீரூற்றி கொண்டாடி வருகிறார்கள்.

    பெரிய மாரியம்மன் குண்டம் விழா காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேர்த்திருவிழா சின்னமாரியம்மன் கோவிலிலும் நடக்கிறது. இப்படி வேண்டும் வரங்களை அள்ளித்தரும் பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மனை மனதில் வழிபட்டு எல்லா நலமும், வளமும் பெறுவோம்.
    Next Story
    ×