search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அதிகாலை 5.45 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சண்முகம் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்தை சுற்றிலும் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டது. கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பூஜையில், கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீரால் அபிஷேகம் நடந்தது.



    பட்டு ஆடைகளாலும், வண்ண மலர் மாலைகளாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.50 மணிக்கு வேதமந்திரம் முழங்க, பக்தர்களின் ‘அரோகரா‘ கோஷத்துடன், கொடிமரத்துக்கு சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் தங்க சப்பரத்தில் அப்பர் சுவாமி எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்திகளிலும் உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

    2-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, பரிவார மூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக் கின்றனர்.
    Next Story
    ×