search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
    • பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.

    பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.

    நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.

    உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.

    பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.

    ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.

    மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.

    ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.

    இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.

    தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.

    பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.

    உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.

    இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

    நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)

    நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    • பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.
    • எப்போதும் இறைவனோடு நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றது.

    யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான்.

    ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார்.

    'மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய தோழர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என கேட்கிறார் இயேசு. யூதர்களுடைய திருமணம் ஒரு கோலாகலமான திருவிழாவைப் போல நடக்கும். மணமகனும், மணமகளும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்காக ஓடிப்போவதில்லை. ஒரு வார காலம் வீட்டிலேயே தங்கியிருப்பார்கள். மணமகனுடைய நெருங்கிய நண்பர்கள் கூடவே இருப்பார்கள்.

    ஏழை மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் அத்தகைய நிகழ்வுகள் அத்திப்பூத்தார் போல் நடக்கின்ற அதிசயச் செயல்கள். அந்த நாட்களில் மகிழ்வாக உண்டு, குடித்து, ஆடிப்பாடி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

    நோன்பு என்பது உள்ளத்தில் துயரம் எழும்போது வருகின்ற ஒரு நிகழ்வாக பல பழங்காலக் குறிப்புகள் சொல்கின்றன. ஏதேனும் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவும், இனிமேல் அத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என உறுதியெடுக்கவும் மக்கள் நோன்பு இருந்தார்கள்.

    பழைய ஏற்பாட்டில் யோசேப்புவை சகோதரர்கள் விற்று விடுகின்ற நிகழ்ச்சியை நாம் அறிவோம். அந்த பாவத்தில் பங்கு பெற்றதற்காக ரூபன் மிகவும் மனம் வருந்துகிறார். அந்த துயரம் அவரை ஏழு ஆண்டுகள் நோன்பு இருக்க வைக்கிறது.

    இந்த ஏழு ஆண்டுகளும் அவர் எந்த இன்பத்தையும் அனுபவிக்கவில்லை, குடிக்கவில்லை, மாமிசம் உண்ணவில்லை. கடுமையான நோன்பு இருந்து வருந்தினார் என்கிறது ரூபனின் ஏற்பாடு என்கின்ற புற நூல் ஒன்று.

    இறைவனின் பார்வை தங்களை நோக்கி நீள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான நோன்புகள் பண்டைய காலங்களில் நிகழ்ந்தன. விவிலியம் முழுவதும் அதற்கான பல குறிப்புகள் உள்ளன.

    பென்யமின் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களுக்கு வெற்றி வேண்டுமென அழுது புலம்பிய இஸ்ரேல் மக்கள், பெத்தேலுக்கு வந்து உண்ணா நோன்பு இருந்தார்கள் என்கிறது நீதித் தலைவர்கள் நூல்.

    வேற்று தெய்வங்களை வழிபட்டு வந்த இஸ்ரேல் மக்கள், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.

    நோன்பு என்பது இறைவனின் கடைக்கண் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நடப்பது. தங்களுடைய இதயத்தின் துயரமும், வேண்டுதலும் உண்மையானது என்பதை நிரூபிக்க நடப்பது. இறைவனே தங்களோடு இருக்கும்போது அது அவசியமற்றது தானே? என்பதே இயேசுவின் கேள்வி சொன்ன ஒரு மறைமுக பதில்.

    அதே நேரம் இயேசு நோன்பு தேவையில்லை என சொல்லவில்லை. தனது முடிவு சிலுவை என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே அவர் சொல்கிறார், `மணமகன் விடைபெறும் காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள். காரணம், அது துயரத்தின் காலம். அது பிரிவின் காலம். இறைவன் இல்லை என கலங்கும் காலம்'.

    இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் நோன்பை வெளி அடையாளமாகத் தான் செய்து வந்தார்கள். அவர்கள் இறைவனின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதை விட, மனிதர்களின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள்.

    அவர்கள் திங்கட்கிழமைகளையும், வியாழக்கிழமைகளையும் நோன்புக்காக தேர்ந்தெடுப்பார்கள். அது தான் சந்தை கூடும் காலம், கூட்டம் வரும் காலம். அந்த நாட்களில் குளிக்காமல், நல்ல ஆடை அணியாமல், கலைந்த தலையோடு, சோர்ந்த முகத்தோடு கடை வீதிகளில் உலவுவார்கள். சிலர் முகத்தை வெளிறியதாய்க் காட்டும் முகப்பூச்சுகளையும் அணிவதுண்டு.

    அப்போது அவர்களைப் பார்க்கும் மக்கள், 'அடடா.. எவ்ளோ பெரிய ஆன்மிக வாதி' என புகழ்ந்து பேசுவார்கள். அதுவே அவர்களுடைய நோக்கம். அதைக்கண்டிக்கும் விதமாகத் தான் இயேசு 'நோன்பு இருப்பதை மறைவாகச் செய்யவேண்டும்' என்றார்.

    இறைவன் நம்மோடு இருப்பது கொண்டாட்டத்தின் காலம். அவர் நம் இதயத்தில் இருப்பது மகிழ்வின் காலம். ஒருவேளை நாம் பாவம் செய்து அவரை விலக்கி வைத்தால் அந்த நேரத்தில் நாம் நோன்பு இருப்பது அவசியமாகிறது. எப்போதும் இறைவனோடு கூடவே நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றதாகி விடுகிறது.

    • அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் புன்னகை.
    • உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பூமாதேவியின் மகனாக பிறந்த நரகாசுரன், பிராக்ஜோதிஷாபுரம் என்ற இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த ஊர் தற்போதைய அசாம் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் கவுகாத்தி ஆகும். அவன் மக்களை துன்புறுத்தி வந்ததைத் தொடர்ந்து, துவாபர யுகத்தில் கிருஷ்ண பகவான் தன் மனைவி சத்யபாமாவுடன், நரகாசுரன் இருப்பிடம் சென்று அவனை அழித்து மக்களை காத்தார். அவன் அழிந்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராணம் சொல்கிறது. கவுகாத்தியில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.

    பிற்காலத்தில் வடநாட்டில் வெற்றி கண்ட சோழமன்னன், அங்கே கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு தன் சேனைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தீபாவளி அன்று பிராக்ஜோதிஷாபுரம் சென்று, அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தினான். கிருஷ்ணரை மனமாற வேண்டிக்கொண்டு தனது படைகளுடன் மீண்டும் தன் தலைநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

    வழியில் நெய்தவாயல் என்ற பகுதியில் ஒரு மணற்பாங்கான நிலப்பரப்பில் வந்து கொண்டிருந்தபோது, சோழ மன்னனின் படைகளில் உள்ளவர்களுக்கு பெரும் களைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. "மன்னா.. நீங்கள் தற்போது செல்லும் பகுதி மிகவும் ஆபத்தானது. களைப்புடன் காணப்படும் உங்கள் படை வீரர்களும், குதிரைகளும் பலியாக வாய்ப்பு உள்ளது" என்றது அந்தக் குரல்.

    இதைக்கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றான் மன்னன். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். அவள் "கவுகாத்தி வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நீங்கள், புனித நீரை கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப் பகுதியில் கோவில் ஒன்றை அமைத்து, புனித தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி புனித நீரை தெளித்துச் சென்றால், உங்களுடைய பயணம் பாதிப்பின்றி அமையும். மேலும் நீங்கள் ஆட்சி செய்யும் பகுதி மேலும் சிறப்படையும்" என்று தெரிவித்து விட்டு, மறைந்தாள்.

    இதையடுத்து நெய்தவாயல் என்ற அந்த பகுதியில் ஒரு பெரிய குளத்தை தன் படை வீரர்களை கொண்டு வெட்டினான், சோழ மன்னன்.

    அந்த பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மன்னனின் கனவில், கவுகாத்தியில் தரினம் செய்த அம்மன் தோன்றினாள். எனவே அங்கே அமைத்த ஆலயத்தில் அம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு `கவுகாத்தி அம்மன்' என்று பெயரிட்டு வழிபாடு செய்தான்.

    அசாம் மாநில பிராக்ஜோதிஷாபுரம் கோவிலில் உள்ள கவுகாத்தி அம்மன் வடிவிலேயே இங்குள்ள அம்மனும் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையின் வலது பக்க கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கதாயுதம், அபய ஹஸ்த முத்திரை தாங்கியும், இடது பக்க கரங்களில் சங்கில் திரிசூலம், செந்தாமரை மலர் உள்ளிட்டவற்றுடன் எட்டு கரங்களைக் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

     இந்த அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் உள்ள புன்னகை, இந்த அம்பாளை சாந்த சொரூபிணியாகவும் காட்டுகிறது.

    சோழ மன்னனால் 16 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஊருணியாக அமைக்கப்பட்ட தீர்த்தம், இவ்வாலய தீர்த்தமாக விளங்குகிறது.

    என்றும் வற்றாத சுத்தமான, சுவையான நீருடன் தாமரை மலர்களால் நிரம்பிய புஷ்கரணியாக இது உள்ளது. விரதம் இருந்து இந்த புஷ்பகரணியில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால், தீவினைகள் அகலும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் ஆடி மாத திருவிழா, பவுர்ணமி பூஜை, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் அம்மனாக, இந்த கவுகாத்தி அம்மன் இருக்கிறார்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது, நெய்தவாயல் கிராமம். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் மீஞ்சூரில் நிற்கும். இங்கு இறங்கி, அங்கிருந்து அரசு பஸ் அல்லது ஆட்டோக்கள் மூலமாக 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நெய்தவாயலை அடையலாம்.

    • பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் என்பதால் இது தேவாரம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப்பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத் தையும் பார்க்கலாம்.

    பாடல்

    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

    விளக்கம்

    திருஞானசம்பந்தர் ஒரு காதினில் தோட்டினையும், மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், காளையை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறை சந்திரனை தனது சடையில் ஏற்ற வண்ணமும், சுடுகாட்டு சாம்பலை, தனது உடல் முழுவதும் பூசியபடி இருக்கிறார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகிறார்.

    அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மன், முன்பொரு நாளில் தன்னை பூஜித்து வணங்கியதன் காரணமாக, அவருக்கு படைப்புத் தொழிலை சரியாகச் செய்யும் வகையில் அருள்புரிந்தவர், சிவ தொறு பெருமான். இவரே பெருமை உடையதும், பிரமாபுரம் என்று அழைக் கப்படுவதுமான சீர்காழி நகரினில் உறைந்து அருள் செய்யும் எனது மதிப்புக்குரிய தலைவன் ஆவார்.

    • 24-ந் தேதி காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.
    • 27-ந் தேதி சங்கடஹர சதுர்த்தி.

    23-ந் தேதி (செவ்வாய்)

    * சித்ரா பவுர்ணமி.

    * மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகை ஆற்றில் எழுந்தருளல்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (புதன்)

    * மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் பவனி.

    * காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (வியாழன்)

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி நவநீத சேவை, தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    26-ந் தேதி (வெள்ளி)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சூரிய பிரபையில் பவனி.

    * ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (சனி)

    * சங்கடகர சதுர்த்தி.

    * சென்னை கேசவப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம், இரவு தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (ஞாயிறு)

    * சென்னை கேசவப் பெருமாள் இரவு யானை வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், இரவு புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரி அம்மன் பவனி.

    கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (திங்கள்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், சென்னை கேசவப் பெருமாள் கோவில்களில் ரத உற்சவம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவைகுண்டம் வைகுண்டபதி ஆலயங்களில் சுவாமி திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    • சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்திரகுப்தன்.
    • `குப்தன்’ என்றால் `கணக்கன்’ என்று பொருள்.

    ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அவர்களை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் மகரிஷிகளும் மற்றும் தபோவனர்களும் தேடி வந்தனர். பரமேஸ்வரன் 'பூலோகத்தில் உள்ள மானிடர்களின் பாவ - புண்ணிய கணக்குகளை எழுத ஒருவரை நியமிக்க வேண்டும்' என எண்ணினார். தற்போது 'நமக்கு இருக்கும் இரு புத்திரர்களுக்கும் (விநாயகர், முருகன்), அநேகமான பொறுப்புகள் இருப்பதால், புதியதாக ஒருவர் அதையெல்லாம் கவனிப்பது நல்லது' என நினைத்தார்.

    அப்பொழுது பார்வதி தங்கக் தகட்டில் வரைந்த அழகான சித்திரத்துடன் வந்தாள். அந்த சித்திரத்தைக் கண்ட பரமேஸ்வரன் அதிசயித்தார்.

    பரமேஸ்வரன் பார்வை பட்டதும், அந்தச் சித்திரம் உயிர் பெற்று எழுந்தது. சகல தேவர்களும் ஆச்சரியப்பட, உயிர் பெற்று வந்தவரிடம் `பாவ - புண்ணிய கணக்குகளை கயிலை மலையில் அமர்ந்து எழுது' என சிவபெருமான் உத்தரவிட்டார். சித்திரத்தில் இருந்து பிறந்ததால் இவரை 'சித்திரகுப்தன்' என அழைத்தனர்.

    'குப்தன்' என்றால் `கணக்கன்' என்று பொருள். அதே நேரத்தில் தேவேந்திரனும், இந்திராணியும், ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதற்கான தவத்தை மேற்கொண்டிருந்தனர். இப்படி அவர்கள் தவம் இயற்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை இங்கே பார்ப்போம்..

    ஒரு சமயம் தேவேந்திரன் பூமியில் புண்ணிய தலத்தை நோக்கி தீர்த்த யாத்திரை வந்தார். அப்போது வழியில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு பேரழகுடன் இருந்த அவரது மனைவியான ரிஷி பத்தினி அகலிகையை கண்டார். அகலிகையை அடைய எண்ணி மறுநாள் காலையில் கோழி உருவெடுத்து சூரியன் உதிக்கும் முன் வந்து கூவினார். கவுதமர், பிரம்ம முகூர்த்தம் தொடங்கி விட்டதாக எண்ணி (சூரியன் உதிக்கப் போகிறான்) கங்கையில் நீராட கிளம்பினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரன், கவுதமர் போல் வேடம் அணிந்து அகலிகையை அடைய ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    அதே நேரத்தில் கவுதமர் கங்கையை நோக்கி செல்கையில், அநேக கொடிகளில் பூக்கள் அரும்பாகவே இருப்பதைக் கண்டார். பூக்கள் இன்னும் பூக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பொழுது விடியவில்லை என திரும்பி வந்தார். கவுதமர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியே ஓட எண்ணினான். ஆனால் கவுதமர், இந்திரனை மடக்கி "நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்றார்.

    அதற்கு பதிலளித்த இந்திரன், "இந்த வருட பஞ்சாங்க பலன் கேட்க வந்தேன்" என்றான். ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்த கவுதமர், "நீ எதை எண்ணி காமம் கொண்டு இங்கு வந்தாயோ, அதே உனக்கு உண்டாகும். உன் உடல் முழுக்க ஆயிரம் யோனிகள் உண்டாகும்" என சபித்தார்.

    பின் அகலிகையின் பக்கம் திரும்பிய கவுதமர், "இந்திரன் என்பதை நீ அறியாமல் இருந்தாய். எனவே நீ கல்லாய் போவாய்" என சபித்தார். அதற்கு அகலிகை "நீங்கள் எவ்வளவு பெரிய மகரிஷி. நீங்கள் இவ்வாறு சொல்லலாமா? இதில் எனது தவறு ஒன்றும் இல்லை" எனக் கூறினாள்.

    (இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள். ரேணுகாதேவி ஜலத்தில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை கண்ணால் கண்டு மனதால் விரும்பினாள். அதற்காக அவள் கற்பிழந்ததாக தலை வெட்டப்பட்டாள். ஆனால் அறியாமல் தன்னை இழந்த அகலிகை, மீண்டும் சாபத்தில் இருந்து விடுபட்டு கற்புக்கரசி என கொண்டாடப்பட்டாள். அந்த காலத்தில் கற்புக்கு வைத்துள்ள அளவுகோல் சரீரத்தை சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்)

    உடனே கவுதமர், அகலிகையை நோக்கி "ராமாவதாரத்தில் ராமபிரானின் திருவடி, கல்லாயிருக்கும் உன்மேல் பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு, மீண்டும் என்னை வந்து அடைவாய்" என்று கூறினார். அப்போது இந்திரனும் கவுதமரின் திருவடியை வணங்கி, தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். "நீ பரமேஸ்வரனை குறித்து கயிலாயத்தில் தவம் செய். உனது ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறும்" என்று கூறி அருளினார்.

    அதே நேரத்தில் அகலிகை சிறிதும் கோபம் குறையாமல் "பெண்ணின் சாபம் பொல்லாதது. நீ தேவேந்திரனாக இருந்தாலும் கூட பத்தினி சாபம் உன்னை விடாது. பட்ட மரம் பூத்தாலும் பூக்கும், காய்க்காத மரமும் காய்க்கும். ஆனால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாது" என சபித்தாள்.

    அடுத்து வந்த நாட்களில் இந்திரன், ஈசனை நினைத்து வழிபட்டதன் பலனாக, ஆயிரம் யோனிகளும், ஆயிரம் கண்களான மாறின.

    ஆனால் அகலிகை சபித்தது போல, இந்திரனுக்கு புத்திரப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. அந்த சாபம் நீங்கவே, இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.

    அப்போது பரமேஸ்வரன், காமதேனுவை அழைத்து "நீ என்னை தரிசனம் செய்து கொண்டிருந்தது போதும். நீ இப்போது தேவலோகம் செல்" என்றார். அதற்கு காமதேனு "சுவாமி உமது தரிசனத்தை விட்டு, நான் தேவலோகம் செல்ல வேண்டுமா?" என கேட்க, "நீ கவலைப்படாதே.. தேவலோகம் சென்று நீ ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டு இங்கு வந்து விடலாம்" என்றார், சிவபெருமான்.

    அதன்படியே காமதேனு தேவலோகம் சென்றது. ஆனால் காமதேனுவுக்கும் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இதனால் இந்திராணி மனம் கலங்கினாள். 'நமக்கு தான் குழந்தை பேறு இல்லை. காமதேனுவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லையே. பத்தினி சாபம் இப்படியா வதைக்கும்' என வருந்தினாள்.

    இதை அறிந்த பரமேஸ்வரன், சித்திரகுப்தனை நோக்கி "நீ காமதேனு கர்ப்பத்தை அடைந்து, அங்கு நீ புத்திரனாகப் பிறந்து தேவலோகத்தில் வசித்து வருவாய்" என கூறி அருளினார்.

    அவரது ஆணைக்கிணங்க, காமதேனு கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை இருந்து, பின் கையில் எழுத்தாணி யுடன் பிறந்தார் சித்திரகுப்தன். தேவேந்திரன் ஒளி பொருந்திய சித்திரகுப்தனை வணங்கி, "நீ இங்கிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொள்" என்றார்.

    குறுகிய காலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்ற சித்திரகுப்தன், தேவேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி எமபுரியில் எமதர்மராஜனின் எமபட்டிணத்தில் கணக்கராக அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுத ஆரம்பித்தார்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோ பூஜை

    செய்ய வேண்டும். காமதேனுவின் வயிற்றில்இருந்து சித்திரகுப்தன் பிறந்ததால், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் பசும்பால், பசு நெய், பசுந்தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாத உணவுதான் உண்பார்கள். தரையில் சித்திரகுப்தன் உருவத்தை எழுதி (அவர் சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால்) வழிபாடு செய்வார்கள்.

    சித்திரகுப்தனுக்கு பலவித சித்ரான்னங்கள் படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, பெண் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதக தோஷங்களும் விலகும்.

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் (பவுர்ணமி) சித்தரகுப்தனுக்கு காலையில் விசேஷ பூஜையும், மாலையில் விமரிசையாக திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

    சித்திர குப்தன் அங்க பூஜை

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாமாவையும் சொல்லி பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    * பாபநாசநாய நம: பாதெள பூஜயாமி (கால்)

    * கமலவர்ணாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    * சித்ராயநம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

    * சித்ரரூபாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    * நதாபீஷ்டதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    * வ்ருகோதராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    * ஓம் ப்ராக்ஞாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

    * காலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * பஹுரூபாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

    * அந்தக ஸசிவாய நம: அதரம் பூஜயாமி (உதடு)

    * மத்யஸ்தாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    * கருணாநிதயே நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    * பத்ம நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)

    * நானாரூபாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    * லலிதாய நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * சித்ரகுப்தாய நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஸர்வேச் வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

    • சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருமலை:

    திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.

     வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா.
    • கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    மதுரை:

    கோவில் மாநகர் என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா. வரலாற்று சிறப்புமிக்க விழாவும்கூட..

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. அதாவது சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

     நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி உள்ளார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

     வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கள்ளழகர் வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    அப்போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார்.

    அங்கு நாளை (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

    பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.

    இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்குபின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

    • மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர்.
    • தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் உள்ள மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னையார் ஆவார். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலாயே, தாயான இசைஞானி நாயனாரையும், தந்தையான சடைய நாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். சுந்தரமூர்த்தி நாயனார், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

    சோழவள நாட்டில், கமலாபுரத்தில் (திருவாரூர்) கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு இசைஞானியார் மகளாகப் பிறந்தார். சிறுவயது முதல் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார்.

    இவர் திருவாரூரில் உள்ள தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமண பருவத்தை அடைந்ததும், இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில், ஆதி சைவ மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சடையனாரிடம் பதிபக்தியுடனும், சிவபெருமானிடம் சிவ பக்தியுடனும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவ நாமங்கள் மற்றும் சிவஸ்துதிகளை கற்பித்தார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானியாருக்கு அருளினார்.

    இசைஞானியார் நாயனார் சிவபக்தியும், பதிபக்தியும் பூண்டு வாழ்ந்து திருதொண்டத்தொகை பாடி, உலகையெல்லாம் உய்வித்த தெய்வ மகனை பெற்று முடிவில் சிவபெருமானின் பாதகமலம் அடைந்தார்.

    சிவபக்தியில் சிறந்த இசைஞானியார் நாயனார் இறைத்தொண்டு செய்து, சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். அன்றில் இருந்து முக்தி அடைந்த நாளை எல்லா சிவாலயங்களிலும் குருபூஜை ஆக கொண்டாடப்படுகின்றது. அதாவது இன்று இசைஞானியார் நாயனார் குரு பூஜை தினம்.

    • பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர்.
    • விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள்.

    தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு சித்திரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்ராபவுர்ணமி நாளில் விரதமிருந்து விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள். அந்த காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், `சித்ரகுப்தன் படி அளக்க…' என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம்.

    சித்ர குப்தர் அவதார தினத்தில் அவரது கதையை படித்தாலோ கேட்டாலோ நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனி சந்நதி உண்டு அங்கே ஏடும் எழுத்தாணியும் இன்ன பிற பொருளும் வைத்து முறையான பூஜையை நடத்தி பிரார்த்தனை செய்வார்கள்.

    நம்முடைய குற்றங்களை பொறுத்துக் கொண்டு நல்வாழ்வு அளிப்பார் என்பதற்காக சித்ரகுப்த பூஜை சித்ரா பவுர்ணமியில் நடைபெறுகின்றது. இந்த நாளில் செய்யும் தானம், சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

    • சித்தரகுப்தருக்கு உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் உள்ளது.
    • சித்திர குப்தரை வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.

    இந்துக்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவ- புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தருடையது.

    புராண வரலாறு

    புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும், நல்லொழுக்கமும் தர்மமும் அதிகம் இருக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், ஈடுபவர்களும், நற்செயல்கள் செய்பவர்களையும் கண்காணிக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில் சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார் எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

    இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது. சித்திரத்தில் இந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து, சித்திரகுப்தரிடம் மக்களின் பாவ-புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது புராண கால நம்பிக்கையாக உள்ளது.

    வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது.

    ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அமைவிடம்

    சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.

    சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள் சித்தரகுப்தரை வணங்கி வந்தால், வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை

    சித்ரா பவுர்ணமி

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடிவு பிறந்து, ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    ×