
இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழா கொடியேற்றம் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார்.
அதை தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கும், மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் 2-ம் பிரகாரம் வலம் வந்தனர். இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வருவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடு இருப்பதால் சித்திரை வீதிகளுக்கு பதில் சுவாமி நான்கு ஆடி வீதிகளை வலம் வருவர். அதை தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந் தேதி கொடியிறக்கப்பட்டு கணக்கு வாசித்தல் நடைபெற்றதும் திருவிழா நிறைவு பெறும். கொரோனா காரணமாக திருவிழா முழுவதும் கோவிலுக்குள் தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.