
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
ஆண்டுதோறும் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கோவில் வளாகத்திலேயே நேற்று மாலை எளிய முறையில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாணம் நடக்கிறது.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகச்சென்று சாமி தரிசனம் செய்து கோவிலை சுற்றி பக்திப்பரவசத்துடன் வலம் வந்தவாறு இருந்தனர். மாலையிலும் சிறப்பு பூஜை நடந்தது.
வேலூரை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பாலமுருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் வேலூரில் உள்ள பேரி சுப்பிரமணியசாமி கோவில், வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில், காங்கேயநல்லூரில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவில், தீர்த்தகிரி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.