
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாள் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.
பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திர புஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம் பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார்.
அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.