
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம் பல தளர்வுகள் உடன் கோவிலை திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக பல மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர்.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நீலிவனநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் கல்வாழைக்கு பரிகாரம் செய்யவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பரிகாரம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சுவாமியை மட்டும் வழிபட்டு சென்றனர்.
இதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்திருந்தனர். அவர்கள் முடிக் காணிக்கை செலுத்தியும், கோவிலின் முன்புறம் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.