
மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமிதேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார். அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர். அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகில வல்லி என்று அழைக்கப்படுகிறாள். சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி வராகரையும், சில தலங்களில் புவிமகளை மடிமீது கொண்டுள்ள வராகரையும் காண்கிறோம். ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராகமூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.
நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தைக் குடித்தும், ஆர்ப்பரித்தார். அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிரமயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளைப் பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர்.
மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள். பிறகு திருமால் அவளைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனைவருக்கும் அருள்புரிந்தார். இதையட்டி நரசிம்மர் ‘மாலோலன்’ என்று அழைக்கப்படுகிறார்.
ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள். அப்போது அவளுக்குச் சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.
எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள். ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.
சிவனால் எரிக்கப்பட்டுப் பார்வதியால் உருவமில்லாதவனாக உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் அவளுக்குப் புத்யும்னன் எனும் பெயரில் மகனாகத் தோன்றினான். கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள். திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.