
கருவறையில் மூலவரான பெரியபிரான், சங்கு - சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவியும், பூதேவியும் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தல மூலவரை, கோடகன் பாம்பு தனது கையால் தாமிரபரணியில் உள்ள சகதியாலும், மண்ணாலும் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. எனவே தான் மூலவர் மீது கல்சுதை வர்ணம் பூசப்பட்டுள்ளது. இவருக்கு அபிஷேகம் கிடையாது.
உற்சவர் ரங்கநாதனுக்கும் அவருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி- பூதேவிக்கும் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவிலின் தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம். இக்கோவிலில் மிகவும் விசேஷமானது அமிர்தக் கலசம். இந்த அமிர்தக் கலசத்தை, பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறியப் பின்பு கோவிலுக்கு வந்து பச்சை பயிறு, வெல்லம் மற்றும் நெய் ஆகியவை கொண்டு தயாரிப்பார்கள். இந்த அமிர்தக் கலசம் பகவானின் அருள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தக் கோவிலுக்கு வரும்போது யாராவது ஒரு பக்தர் அமிர்தக்கலசம் படைத்து பகவானுக்கு சாத்திக் கொண்டிருக்கும் போது வருபவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
இந்த ஆலயத்தின் பின்புறத்தில் நீண்ட படித்துறை உள்ளது. இங்கு ஸ்நானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். கல்விச்செல்வம் பெருகும் என்கிறார்கள். எல்லா வளமும் கிடைக்க தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து, பெரியபிரான் நமக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டு இருக்கிறார். திருநெல்வேலியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.