
கார்த்திகை தீபத்திருவிழா 8-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக இரவு 11 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர், காந்தி சிலையின் அருகில் வரும்போது வாணவேடிக்கை நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
விழாவின் 9-வது நாளான நேற்று பகல் சுமார் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து கோ பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அத்துடன் 3,500 கிலோ நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மாடவீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மகா தீபத்தையொட்டி கோவிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் மற்றும் ஆன்லைன் தரிசனம் பெற்றவர்கள் அமர்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது