
வேறு எந்த தலத்திலும் காணப்பெறாத படி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.
இத்தகைய விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருள்பாலித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் சித்திரை பெருந்திருவிழா நாட்களில் அம்மனே செய்கிறார் என்பது ஐதீகமாகும். பிரமனின் தொழிலான படைத்தல் சிவபெருமானின் தொழிலான அழித்தல் மகாவிஷ்ணுவின் தொழிலான காத்தல் ஆகிய மூன்று தொழில்களுடன் மறைத்தல் அருள்பாலித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் புரிந்து வரும் சமயபுரம் மாரியம்மனை தேர் திருவிழாவில் தரிசனம் செய்ய கோடி கண்கள் போதாது.
இத்தகைய சிறப்புக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திருப்பணிகளால் இக்கோவில் திருப்பதி திருமலைக்கு நிகரான வசதிகளை வருங்காலங்களில் பெறுவது உறுதி. தெற்கு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணி நிறைவடையும் நாளில் இக்கோவில் மேலும் பல சிறப்புக்களையும் பெற்றே தீரும்.