
நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
தஹிகலா என்பது பல்வேறு வகையான திண்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிப்பதாகும். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தோடு சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று கருதுவதால் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
கிருஷ்ணர் வெண்ணெய் மீது பிரியம் கொண்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.
பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜ பூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.