
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளூர் மக்களுக்கு மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதியிலிருந்து வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர் கள் வந்து மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கடலுக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.