search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாளை நடக்கும் நடிகர்-நடிகைகள் போராட்டத்தில் ரஜினி-கமல் பங்கேற்பு
    X

    நாளை நடக்கும் நடிகர்-நடிகைகள் போராட்டத்தில் ரஜினி-கமல் பங்கேற்பு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்க இருக்கின்றனர். #CauveryManagementBoard
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவும் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகர் - நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த போராட்டம் நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.



    இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்கள் தவிர விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இதற்காக தமிழ்திரை உலகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கைகள் வருமாறு:-

    * மத்திய அரசே தமிழர்களின் உரிமையை நிலைநாட்டு. நேர்மையான காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்து.

    * மத்திய அரசே மக்களின் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடு.

    மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வை மதியுங்கள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    இந்த போராட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தின் முடிவில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

    நடிகர்-நடிகைகள், திரைப்பட உலகினர் பங்கேற்கும் இந்த போராட்டத்துக்காக வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை மேடை அமைக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #CauveryManagementBoard

    Next Story
    ×