தமிழ்நாடு
கமல் கட்சியின் எதிர்காலம் என்ன?
தமிழ்நாடு

கமல் கட்சியின் எதிர்காலம் என்ன?

மாலை மலர்

  • தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் கமல் கட்சிவெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கியவர் கமல்ஹாசன். தி.மு.க.,

அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கமல்ஹாசன் கூறி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெற்றது.

இதைத் தொடர்ந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் சில கட்சிகளோடு கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் கள மிறங்கியது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அங்கு அதிக வாக்குகளை வாங்கிய அவர் பா.ஜ.க. வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தேர்தலிலும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் அமைந்திருந்தது.

இது தொடர்பாக அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கமல்ஹாசன் ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இப்படி தேர்தல் களத்தில் மிகவும் ஆவேசமாக காணப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி அரசியல் பக்கம் அவர் செல்லமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கமல்ஹாசனோ நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றார். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு கூட்டணியில் இடம் கிடைத்தது.


ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்க வில்லை. ஒரு மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் வரும் நாட்களில் மேல் சபை எம்.பி.யாக டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சில இடங்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. கூட்டணியிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ளது. இப்படி கூட்டணி அரசியலால் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள் நீதி மய்யம் கட்சி திசை மாறி பயணிக்க தொடங்கியுள்ளது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே இந்த இரண்டு கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் மேற்கொள்ள வேண்டியகட்டாயத்தில் உள்ளன.

ஏனென்றால் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகிற நாட்களில் இந்த கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.


பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த திட்டமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பி.யாக அவர் பதவி வகிக்கும் பட்சத்தில் நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

இதனால் தி.மு.க. சார்பில் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. மாற்றத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன் கட்சியை வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கூட்டணி அரசியலுக்குள் முடங்கிப் போய் இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாற்றத்தை நோக்கி பயணித்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் சென்றதன் மூலம் இனி அவரது பழைய பயணம் தடைபடும் என்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி சொல்வதையே கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் எத்தனை இடங்களை கேட்டு பெறுவார் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி உள்ளது.

தொடர்புடையவை