தொழில்நுட்பம்

வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக் கூடாது - தகவல் பரிமாற்றங்களுக்கு புதிய திட்டம் வகுக்க மத்திய அரசு தீவிரம்

Published On 2019-06-28 03:26 GMT   |   Update On 2019-06-28 03:26 GMT
இந்தியாவில் அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு இனியும் வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.



இந்தியாவில் முக்கிய அரசு அதிகாரிகள் தங்களது அலுவல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் போன்று தகவல் பரிமாற்ற செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய திட்டத்தின் மூலம் அரசு நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் எவ்வித அச்சுறுத்தல் இன்றி இயங்க முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு சார்பில் சொந்தமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் அனைத்து வகையான சேவைகளை பிரத்யேகமாக உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்காமல் அரசின் சொந்த சேவைகளை பயன்படுத்த துவங்க வேண்டும். அனைத்து வித தகவல் பரிமாற்றங்களும் பாதுகாப்பான நெட்வொர்க்கில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.



இந்தியாவில் ஹூவாயின் 5ஜி சேவைக்கு தடை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. ஹூவாய் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைமை அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற சம்பவத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். எதிர்காலத்தில் இதேபோன்ற நிலைமை நமக்கும் ஏற்பட்டு, அமெரிக்க நிறுவன சேவைகள் இந்தியாவில் குறைக்கப்படும் பட்சத்தில் அனைத்து பணிகளும் முடங்கலாம். 

இதுபோன்று தேவையற்ற பிரச்சனையை தவிர்க்க தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகளும் ஜிமெயில், வாட்ஸ்அப் போன்ற தனியார் தகவல் பரிமாற்ற சேவைகளை அலுவல் ரீதியாக பயன்படுத்துவதை தவிர்த்து அரசு உருவாக்கும் சேவைகளை பயன்படுத்த துவங்க வேண்டும்.

புதிய தகவல் பரிமாற்ற முறைகள் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மத்திய அரசு சார்பில் வெளியாகவில்லை. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News