தமிழக செய்திகள்

சென்னை ஆவடியில் பியூஸ் கேரியர்கள் திருட்டு- 2 பேர் கைது

போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆவடியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. இந்நிலையில் திடீரென நேற்று காலையில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் சரிசெய்யவந்த ஊழியர் மின்சார டிரான்ஸ்பாரம்களை சோதனையிட்டபோது 20-க்கும் மேற்பட்ட பீஸ் கேரியர்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பிருந்தாவன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது19) மற்றும் மாதனாங்குப்பம் அந்தோணி நகரை சேர்ந்த வினித்ராஜ் (வயது 20) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி நகர போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பல மணிநேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.மேலும் போலீசார் கூறும்போது, அயப்பாக்கம் பகுதியிலும் இதுபோன்று பீஸ் கேரியர் திருடியுள்ளதாகவும் மற்றும் சின்ன சின்ன திருட்டு வழக்குகள் இருவர் மீதும் இருப்பதாகவும் அதுகுறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.